வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | VEL worshiping Method at home

sathiya 225 31/3/2024
 வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | VEL worshiping Method at home

வீட்டில் வேல் வழிபாடு பூஜை முறை பற்றி பலர் என்னிடம் கேட்டிருந்தீர்கள்,அதை பற்றி இங்கே பார்க்கலாம்


நம் வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு உலோகத்தால் ஆன வேலை முதலில் வாங்கி வர வேண்டும்.பிறகு நாம் அதற்க்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் எப்படி அபிஷேகம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அபிஷேகம் செய்வதற்கு காய்ச்சாத பால், விபூதி, பன்னீர், சந்தனம், குங்குமம் தேவைப்படும்.

முதலில் வேலை சுத்தமான தண்ணீரால் கழுவவேண்டும். பிறகு ஒரு செம்பு தட்டை வைத்து அதன் மேல் வெள்ளிக் கிண்ணம் அல்லது செம்பாலான  பாத்திரத்தை வைத்து அதில் பச்சரிசியை நிரப்பி அதன் நடுவே வேல் நிற்பது போல வைக்க வேண்டும்.பிறகு காய்ச்சாத பாலை ஊற்றி அபிஷேகம் செய்து, வேலின் நடுவில் சந்தனம் குங்குமம் வைத்து கற்பூர ஆராதனை காட்ட வேண்டும். 

பிறகு தண்ணீரை ஊற்றி அதை கழுவி விட வேண்டும். அடுத்ததாக விபூதியை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு பன்னீரையும் சந்தனத்தையும் ஒன்றாக கரைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் முடிந்த பிறகு வேலை அரிசியில் இருந்து எடுத்து சுத்தமான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். பிறகு செம்பு பாத்திரத்தில் இருக்கும் அரிசியை எடுத்து வேறொரு தட்டில் கொட்டிவிட்டு, செம்பு பாத்திரத்தை சுத்தமான துணியை கொண்டு துடைத்துவிட்டு அதில் புதியதாக பச்சரிசியை நிரப்பிவிட்டு வேலை மீண்டும் அதில் நிற்க வைக்க வேண்டும். தட்டில் இருக்கும் அபிஷேக நீரை நாம் தீர்த்தமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

அபிஷேகம் முடிந்த பிறகு நாம் வேலுக்கு அலங்காரம் செய்ய வேண்டும். அலங்காரம் முடிந்த பிறகு அர்ச்சனை செய்ய துவங்கலாம். அர்ச்சனை செய்ய செவ்வரளி பூ அல்லது பன்னீர் ரோஜா சிறந்தது. வேல் பதிகத்தை பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் 108 முறை “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்யலாம். நெய்வேத்தியமாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் மற்றும் தேங்காய் வைக்கலாம். தங்கள் வசதிக்கேற்ப சர்க்கரைப் பொங்கல், பாசிப்பருப்பு பாயாசம் என்றும் கூட செய்யலாம். இந்த வேல் வழிபாட்டில் கடைசியாக நாம் மறக்காமல், கண்டிப்பாக கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டை நாம் காலையிலோ அல்லது மாலையிலோ செய்யலாம். மேலும் இந்த வழிபாட்டை செய்யக்கூடிய நாட்களாக கருதப்படுவது முருகனுக்கு உகந்த நாட்களான சஷ்டி, கிருத்திகை, விசாக நட்சத்திரம் உள்ள நாட்கள், பரணி நட்சத்திரம் உள்ள நாட்கள், செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை போன்றவை ஆகும். இந்த நாட்கள் அனைத்திலும் செய்ய இயலாதவர்கள் மாதம் ஒரு முறையோ அல்லது வாரத்தில் ஒருமுறையோ இந்த பூஜையை மேற்கொண்டு வரலாம்.

மேற்கூறிய முறையில் முருகனின் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் 21 நாட்கள் செய்து வருவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் தீருவதற்கான வழி பிறக்கும். தொழில், வியாபாரம் அல்லது இன்ன பிற விடயங்களில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். செவ்வாய் தோஷம் ஏற்பட்டு நீண்டகாலமாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல அழகான, ஆரோக்கியமான குழந்தைப் பேறு கிடைக்கும். உங்களையும் வீட்டையும் பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் ஒழியும். காரியத் தடை, தாமதங்கள் நீங்கும்.
 

எந்த நாட்களில் கடவுள் முருகனின் வேல் வழிபாடு செய்வது நல்லது?

“வேலுண்டு வினையில்லை” என்ற கூற்றுக்கு ஏதுவாக, வேலை வணங்குபவர்களுக்கு எந்த தீவினைகளும் நெருங்காது என்பார்கள். 
 முருகனுக்கு வேலை அருளியவர் சிவபெருமான். அந்த வேலுக்குச் சக்தியை அளித்தவர் பராசக்தி. இதனால் இரட்டைச் சிறப்புகள் வேலுக்குக் கிடைக்கின்றன.முருகனின் ஆறாம்படை  வீடான சோலையில் இன்றும் வேல்தான் மூலவராக உள்ளது.வேலைத் தினமும் வழிபடுவது நல்லது. குறிப்பாக செவ்வாய்க்  கிழமைகளிலும், வெள்ளிக் கிழமைகளிலும் வேலை நிச்சயம் வழிபடவேண்டும். மேலும், கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதல் முருகனுக்குரிய  நாட்களில் வேல் வழிபாடு மிக அவசியம் ஆகும்.