புதுக்கோட்டை மாவட்டம், மலைக்கோவிலான விராலிமலை முருகன் கோயில் மிகவும் சிறப்பு மிக்கது. 207 படிகள் கொண்ட இந்த மலையின் உச்சியில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த மலைக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இத்தலத்தில்தான் முருகன் அருணகிரிநாதருக்கு கூடு விட்டு கூடு செல்லும் வித்தையான அஷ்டமா சித்து கற்றுக் கொடுத்ததாக ஸ்தல வரலாறுகள் கூறுகின்றன. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
வரலாறு :
இப்போது கோயில் இருக்கும் இடத்தில் ஒரு குரா மரம் ஒன்று இருந்தது. வேங்கை ஒன்றை வேடன் துரத்தி வருகிறான். அப்படி வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை மறைந்துவிடுகிறது. குரா மரம் இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பதாக நம்பி வழிபாடுகள் செய்யப்படுகிறது.
வயலூரில் அருணகிரிநாதருக்கு தரிசனம் தந்த முருகன், விராலிமலைக்கு வருமாறு கூறியதால் அருணகிரிநாதர் இங்கு வந்துள்ளார். வயலூரிலிருந்து திரும்பிய அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் கூறிய விராலிமாலை எங்கே உள்ளது என்று தெரியவில்லை, அப்போது முருகப்பெருமான் வேடன் வடிவில் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம். அத்தகைய சிறப்பு வாய்ந்தது இத்திருத்தலம். வயலூர் திருத்தலத்தில் அருணகிரிநாதர் நாவில் ஓம் என்று எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் விராலிமலையில் தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி எனும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வழங்கியுள்ளார். இத்தலத்தில் வெகு காலம் தங்கியிருந்த அருணகிரி நாதர் விராலிமலை முருகனை தன் திருப்புகழில் மனமுருகிப் பாடியுள்ளார்.
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறும். வசிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் தங்களது சாபம் நீங்க இங்கு வந்து தவமிருந்தனர். இத்தலத்தைப் பற்றி, விராலிக் குறவஞ்சி எனும் நூலை முத்துப்பழனி கவிராயர் இயற்றியுள்ளார். திருப்புகழில் 18 முறை விராலிமலையைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இதிலிருந்தே இத்திருத்தலம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலைக்கு நிகராக ஏராளமான சித்தர்கள், ஞானிகள் தவம் செய்த மலை இந்த விராலிமலை. திருவாரூரைச் சேர்ந்த தட்சிணா மூர்த்தி என்ற அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம் இதுவாகும். செனாதனர், ஜெனகர், செனந்தர், செனக்குமாரர் ஆகிய நால்வருக்கும் தியானம் செய்யும் போது முருகப்பெருமானே தோன்றி அருள் புரிந்த திருத்தலம் விராலிமலை. வள்ளி திருமணம் நடந்த திருத்தலம் மற்றும் மூலவரான முருகப்பெருமான் 10 அடி உயரத்தில் இருப்பது ஆகியவை இத்தல சிறப்புகளாகும்.
தவிட்டுக்குப் பிள்ளை வாங்கும் வழக்கம்
குழந்தை வரம் வேண்டுவோருக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பழக்கம் இங்கு உள்ளது. குழந்தை பிறந்ததும், அதை முருகப்பெருமானிடமே அவரது பிள்ளையாகத் தத்து கொடுத்து விட்டுப் பிறகு குழந்தையின் மாமா அல்லது சித்தப்பன்மார்கள் இறைவனுக்கு தவிட்டைக் கொடுத்து விட்டுப் பிள்ளையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் நேர்த்திக்கடன் இங்கு விசேஷமானது.
சுருட்டு படைக்கும் வழக்கம்:
இத்திருத்தலத்தில் ஒரு சமயம் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து எனும் பக்தர் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் பலத்த காற்றுடன் பெருமழை பெய்தது. அருகே இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆற்றைக் கடக்க முடியாமல் போனது. அச்சமயம் முருகப்பெருமானைப் பிரார்த்தித்தார். குளிர் தாளாமல் சுருட்டு ஒன்றை பற்ற வைத்த போது அவர் அருகில் ஒருவர் குளிரில் நடுங்கியபடி நின்றார். அவர் மீது இரக்கம் கொண்ட கருப்பமுத்து, 'உங்களுக்கு சுருட்டு வேண்டுமா?' என கேட்டார். வந்தவரும் சுருட்டை ஏற்றுக் கொண்டார். மேலும் அந்த நபர் கருப்பமுத்து ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின் திடீரென்று காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோயிலை வந்தடைந்து முருகனை தரிசனம் செய்த போது, அங்கே அவர் முன் சுருட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.
கருப்பமுத்து நடந்ததைக் கூறிய போது அங்கிருந்த மக்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை பூஜை வேளையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் உருவானது. பின்னர் புதுக்கோட்டை மகாராஜா இடையில் அந்த வழிபாட்டிற்கு தடை விதித்தார். அவர் கனவில் முருகன் தோன்றி, "எனக்கு சுருட்டு படைத்து வழிபடுவது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காகத்தானே தவிர, புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக அல்ல. துன்பத்தில் ஒருவக்கு ஏதோ ஒரு வழியில் உதவ வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதற்காகவே அவர் தந்த சுருட்டை தீயதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். இவ்வழக்கம் தொடரட்டும். தடை செய்ய வேண்டாம்" என கூறி மறைந்தார். அதன் பின்னர் இன்றுவரை இப்பழக்கம் தொடர்கிறது. மக்கள் இந்த சுருட்டை பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு போய் வீட்டில் வைக்கின்றனர். கடவுளுக்கு என்ன படைக்கிறோம் என்பது முக்கியமல்ல; அன்பும் பக்தியுமே முக்கியம் என்பதை உணர்த்தவே இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
நாதரின் வளைந்து காணப்படும் தம்புரா:
இந்த விராலிமலை சண்முகர் கோயிலில் நாரதர் உற்சவராக வீற்றிருக்கிறார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்க சிவபெருமான் அவரது ஒரு சிரசைக் கொய்தார். அப்போது நாரதர் தன் தந்தைக்காக சிவனிடம் வாதிட்டார். இதனால் நாரதர் சிவநிந்தனைக்கு ஆளானார். இதனால் அவரது தம்புராவும் வளைந்தது. நாரதர் இத்தல முருகப் பெருமானை வணங்கி சாப விமோசனம் பெற்றார். எனவே தான் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். அவரது தம்புராவும் வளைந்து காணப்படுகிறது. கோவில் திருவிழாக்களின் போது சுவாமி முன்பாக இவரும் உலா வருவது சிறப்பாகும்.
இத்தலத் தீர்த்தம் நாகதீர்த்தம் ஆகும். தீர்த்தத்தின் நடுவே நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் நாக தீர்த்தம் எனப்படுகிறது.
இங்கு வந்து முருகனை வழிபடுவோருக்கு மன அமைதி, மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
முடிக் காணிக்கை, பால்குடம் எடுத்தல், காது குத்தல், காவடி எடுத்தல், சஷ்டி விரதம், நோய் தீர ஆண்கள் அங்கபிரதட்சணம், பெண்கள் அடிப்பிரதட்சணமும் செய்கின்றனர். இங்கு சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி போன்றவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருப்பது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது, திருப்பணிகளுக்கு பொருளுதவி போன்றவை இத்திருத்தலத்துக்கு நேர்த்திக்கடன் செய்யலாம்.
வழி:
திருச்சி - மதுரை இடையிலான வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலை அமைந்துள்ளது.