ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது பழமொழி.பாவங்களை போக்கும் காசிக்கு இணையான தலம்.மயிலாடுதுறையில் வாழ்பவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள். அத்தனை சிறப்புக்கள் வாய்ந்த ஊர் மயிலாடுதுறை.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது.சுமார் ஐயாயிரம் வருடப் பழமையானது இந்த ஆதி மயூரநாதர் திருக்கோயில் இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது நம்பிக்கை.காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று.
மயூரநாதர் சுயம்பு மூர்த்தியாகவும், அபயாம்பிகை அம்பாள் இங்கு தவம் செய்த மயில் வடிவில் காட்சியளிக்கிறார். 164 அடி உயரத்தில் 7 நிலை ராஜ கோபுரம் மாநிலத்திலேயே மிக உயரமானது மற்றும் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி பெருமாள் கோவில் கோபுரத்தை விட உயரமானது.
வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் தனியாக சன்னதி கொண்டுள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.
இத்தலத்திலுள்ள முருகன் சந்நிதி மட்டும் தருமையாதீனத்திற்கு உரியது. பிராகாரத்தில் இடதுபுறம் குமரக்கட்டளைக்குரிய ஆஸ்தான மண்டபம் உள்ளது. மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமியின் திருக்கோவில் உள்ளது. இந்த முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குமரக்கட்டளை மண்டபத்தில் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் புராணக் குறிப்புகள்
ஸ்கந்த புராணம், சிவபுராணம், பிரம்மாண்ட புராணம், சிதம்பர புராணம் போன்ற புராணங்கள் மயிலாடுதுறையின் பெருமையைக் குறிப்பிட்டு காவிரியின் இருப்பை போற்றுகின்றன. முருகப்பெருமான் மயூரநாதரின் அருளைப் பெற இங்கு வழியனுப்பியதாகவும், பின்னர் இங்கிருந்து திரு விடைக்கழிக்கு (திரு கடையூர் அருகில்) சென்றதாகவும் ஒரு குறிப்பு உள்ளது.
அம்பிகை மயில் உருவத்தில் பூஜை செய்த தலங்கள் இரண்டு. ஒன்று திருமயிலாப்பூர். மற்றொன்று பல்வேறு பெருமைகளையுடைய திருமயிலாடுதுறை. இந்த மயிலாடுதுறைத் தலம் காசிக்கு நிகரான தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கங்கையே இங்கு வந்து காவிரியில் மூழ்கி தன் பாவங்களைப் போக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இத்தலத்து மாயூரநாதரை கௌரி, இந்திரன், பிரம்மன், ப்ரஹஸ்பதி, அகத்தியர், நாதசர்மா-அனவித்தை, திலீபன், சப்த மாதாக்கள், திக்குபாலகர்கள் மற்றும் பலவகையான விலங்குகளும், தேவர்களும் வழிபாடு செய்துள்ளனர்.
இத்தலத்தின் பெருமைகளை பல சான்றோர்கள் போற்றிப் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், வள்ளலார், மகாவித்வான், ஆதியப்ப நாவலர், வேதநாயகம் பிள்ளை, உ.வே.சா., மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவராயர், அருணாசலகவிராயர், முத்துசாமி தீட்சிதர், மகாகவி காளமேகப் புலவர், கோபாலகிருஷ்ண பாரதி, புலவர் இராமையர், துரைசாமி பிள்ளை, கிருஷ்ணசாமி ஐயர், சிதம்பர ஸ்வாமிகள் ஆகியோரால் போற்றப்பட்டத் தலம்.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் பிரம்ம தீர்த்தக் குளம்:
அழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம். குளத்தின் நடுவே நீராழி மண்டபம் உள்ளது. மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், வைகாசி விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
மயூரநாதசுவாமி கோயில் இத்தல வரலாறு:
தட்சன் மகளான தாட்சாயணி தன் தந்தையின் மேல் கொண்ட கோபத்தைப் போக்கிக் கொள்ள நினைத்து மயில் வடிவம் கொண்டு பூஜித்து வழிபட்ட தலமே மயிலாடுதுறைத் தலம். அன்னைக்கு பெருமான் ஆண் மயிலாக வந்து ஆடி காட்சி கொடுத்து பின்னர் தாண்டவமாடி அருள் புரிந்தமையால் கௌரி மயூரநாதர் என்றும், கௌரி தண்டவரேசர் என்றும் மயூரநாதர் அழைக்கப்பட்டார். இந்த சபைக்கு ஆதி சபை என்றும், இத்தாண்டவத்திற்கு கௌரி தாண்டவம் என்றும் பெயர் வந்தது. இதற்குப் பின் இறைவன் அம்பாளைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நிகழ்ந்த தினம் ஐப்பசி மாதம் 27-ம் நாள். கௌரி தாண்டவம் ஆடிய நாள் ஐப்பசி மாதம் 25-ம் நாள். அம்பாள் மயில் உருவில் எழுந்தருளி மாலையில் நான்கு பிரகாரங்களிலும் மயிலாக ஆடி அம்பாளாக எழுந்தருளும் காட்சியும், இறைவனோடு சேர்ந்தும் காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.
சிவபெருமானை மதிக்காமல் பார்வதி அம்மாள் தனது தந்தை நடத்திய யாகத்தில் அழையா விருந்தாளியாக பார்வதி கலந்து கொண்டுள்ளார்.அந்த யாகத்தில் அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்தார். சாபம் நீங்க காவேரி கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்கள் தவம் செய்து தன்னை மீண்டும் சந்திக்குமாறு கூறியுள்ளார்.பார்வதி மயில்ரூபம் எடுத்து மயிலாடுதுறை நகரில் காவேரி நதியின் வெகு காலம் தவம் செய்து இருந்தார். இதைத் அறிந்த சிவன் ஆண் மயில் உருவெடுத்து பார்வதியை சந்தித்து பெண் மயிலான பார்வதியுடன் ஆடி பார்வதிக்கு சாப விமோசனம் தந்தார். சிவனும் பார்வதியும் மயில் உருவத்துடன் ஆடியதால் மயிலாடிய காவிரித்துறை என்று இத்தலம் பெயர் பெற்றது.
இத்தகைய சிறப்புகள் பெற்ற மயிலாடுதுறையில் ஐப்பசி மாதத்தின் 30ம் நாள் காவிரி நதிக்கரையில் துலா கட்ட உற்சவம் நடைபெறும் அந்த உற்சவத்தில் காவிரி நதியில் நீராடினால் தனது பாவங்கள் நீங்குவதாக மக்கள் நம்புகிறார்கள். இக்காவிரி நதி காசி நதிக்கு இணையாக கருதப்படுகிறது.
ஒருமுறை கன்வ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும்போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கன்வ முனிவரை வணங்கி, தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற, தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் காவிரியில் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற, மூவரும் அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் துலா கட்டத்தில் நீராடி தங்கள் மீது மக்கள் கரைத்த பாவங்களைப் போக்கிக்கொள்கிறார்கள் என்று புராணம் கூறுகிறது. துலா மாதத்தில் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோரும் மாயூரத்தில் உள்ள காவிரியில் நீராட வருகின்றனர் என்று தல புராணம் கூறுகிறது.
ஆகையால், துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும், கடைசி நாளான 30-ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் நமது பாவங்கள் யாவும் விலகும், மோட்சம் கிட்டும்.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் இறைவி பெயர் மற்றும் இறைவன் பெயர்:
மயூரநாதர்,அபயாம்பிகை, அஞ்சல்நாயகி
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் எங்கு உள்ளது?
அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609001
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் எப்படிப் போவது?
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் timings
நடை திறப்பு நேரம்
மயூரநாதசுவாமி கோயில் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மயிலாடுதுறை இவ்வூரைச் சுற்றியுள்ள சப்ததான தலங்கள்:
*அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், மயிலாடுதுறை
*அருள்மிகு புனுகீஸ்வரர் திருக்கோயில், கூறைநாடு, மயிலாடுதுறை
*சித்தவனம் என்ற சித்தர்காடு, மயிலாடுதுறை
*அருள்மிகு மார்க்கசகாய சுவாமி திருக்கோயில், மூவலூர்
*புருஷாமிருகம் பூஜித்த அருள்மிகு அழகநாதர் திருக்கோயில், சோழன்பேட்டை
*அருள்மிகு வதானேஸ்வரர் திருக்கோயில், சேந்தங்குடி
*அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், துலாக்கட்டம் தென்புறம், மயிலாடுதுறை பெரியகடைவீதி